நல்வழி - ஔவை - 40
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா.
பொருள்: பால், தெளிந்த தேன், வெல்லப்பாகு, பருப்பு இவை
நான்கையும் கலந்து (பாயஸம்!) நான் உனக்கு தருவேன்,
உயிர்களுக்கு நல்லது செய்யும், உயர்ந்த யானை முகம் கொண்ட
விநாயகப் பெருமானே, நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றையும் தா.
1. புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்-எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லுந்
தீதொழிய நன்மை செயல்.
பொருள்: நாம் செய்யும் புண்ய கார்யங்கள் நமக்கு உயர்வைத்
தரும். பாவ கார்யங்கள் நமக்கு அழிவைத் தரும். நம் முன்
பிறப்பில் நாம் செய்த அவைகளே நமக்கு சொத்து. யோசித்துப்
பார்த்தால் எந்த சமயமும் இதைத் தவிர வேறெதையும்
சொல்லவில்லை. எனவே தீதை ஒழித்து நன்மையே செய்யுங்கள்.
2. சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.
பொருள்: நீதி நூல்களில் உள்ள முறை தவறாது பிறர்க்கு உதவுபவர்
பெரியோர், உதவாதவர் இழிந்தோர். சொல்லப்போனால் உலகில்
இது இரண்டே சாதிகளாகும்.
3. இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே
இடும்பொய்யை மெய்யென் றிராதே - இடுங்கடுக
உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.
பொருள்: துன்பங்களை இடும் பை இது, இதையே இயல்பாக
உடைய உணவை இடும் இந்த பொய்யுடலை மெய்யென்று
நினைத்துக் கொண்டு இருக்காதே. விரைந்து பிறர்க்கு
உதவுவதையே செய்து வந்து, சம்சாரம் எனும் இந்த பெரும் நோயை
வென்றவரை மோக்ஷமாகிய வீடு அழைத்துக் கொண்டாடும்.
4. எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய் யொண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லாற் - கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக்குமே
ஆங்கால மாகு மவர்க்கு.
பொருள்: நாம் செய்த புண்யத்தின் காலம் வராத போது நாம்
திட்டமிட்டுச் செய்தாலும் ஒரு கார்யத்தின் பலன் கிடைக்காது.
காலம் வந்தாலே பலன் கிடைக்கும். காலம் கருதாது செய்த
முயற்சி, மாங்காய்க்கு ஆசைப்பட்டு ஒரு குருடன் எறிந்த அவன்
ஊன்று கோல் போல் ஆகிவிடும். (நடக்க இருந்த கோலும் போய்,
மாங்காயும் கிடைக்காதது போல்)
5. வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றாற் போகா - இருந்தேங்கி
நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரந் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.
பொருள்: நமக்கு என்று விதிக்கப்படாத ஒன்று நாம் எவ்வளவு
வருந்தி முயற்சித்தாலும் நமக்குக் கிடைக்காது. நமக்கு என்று
விதிக்கப்பட்ட ஒன்று நாம் எவ்வளவு சொன்னாலும் நம்மை விட்டுப்
போகப்போவதுமில்லை. ஆனால் இவைகளையே வெகுகாலம்
ஏங்கி நினைத்து நெஞ்சம் புண்ணாகி பின் இறந்து போவதே மனிதர்
தொழிலாகி விட்டது.
6. உள்ள தொழிய ஒருவர்க் கொருவர்சுகங்
கொள்ளக் கிடையா குவலயத்தில் - வெள்ளக்
கடலோடி மீண்டு கரையேறி னாலென்
உடலோடு வாழும் உயிர்க்கு
பொருள்: திரைகடல் தாண்டிப் போய் வந்து வேலை செய்து
பொருள் சேர்த்தாலும் ஒருவர்க்கு எவ்வளவு கிடைக்க வேண்டும்
என்று விதி இருக்கிறதோ அவ்வளவே கிடைக்குமே ஒழிய,
இன்னொருவர் சுகமும் சேர்த்து அவருக்குக் கிடைக்கப்
போவதில்லை.
7. எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை - நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போற்
பிரிந்திருப்பார் பேசார் பிறர்க்கு
பொருள்: எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் இந்த உடல் புழுக்களும்,
நோய்களும் மலியும் இடமே. இதை அறிந்த நல்லவர்கள் தாமரை
இலை நீர்ப் போல இதனிடம் பற்று வைக்காமலே இருப்பர்.
பிறரிடமும் இதைக் குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருக்க
மாட்டார்கள்.
8. ஈட்டும் பொருண்முயற்சி எண்ணிறந்த வாயினும் ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணு மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணுந் தனம்
பொருள்: அகிலத்தில் வாழும் மனிதர்களே! எண்ணிறந்த வழிகள்
பொருள் தேடுவதற்கு இருந்தாலும், விதி நமக்கென்று
விதித்திருந்தாலன்றி எதுவும் நமக்குக் கிடைக்கப் போவதில்லை.
கிடைத்தாலும் நிலைப்பதில்லை, எனவே நல்ல மரியாதையை
மட்டுமே விரும்பித் தேடிக் கொள்ளுங்கள்.
9. ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து
பொருள்: பெருக்கெடுத்து ஓடிய நீர் வற்றி, கால் சுடும் அளவிற்கு
காய்ந்திருந்தாலும் ஆறானது தனது ஊற்று நீரால் உலகை ஊட்டி
வாழ்விக்கும். அதுபோலவே வறுமை அடைந்த போதும் நல்ல
குடியில் பிறந்தவர்கள் தகுந்தவர்களுக்கு இல்லை என்று சொல்ல
மாட்டார்கள்.
10. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்னென் றிட்டுண் டிரும்.
பொருள்: மக்களே! ஆண்டுகள் தோறும் அழுது புரண்டாலும்
இறந்தவர் மீண்டும் வரப்போவதில்லை. நாமும் அவ்வழியிலேயே
போகப்போகிறோம். எனவே நாம் இருக்கும் வரை எந்தக்
கவலையும் கொள்ளாமல் பிறர்க்கும் கொடுத்து நாமும் உண்டு
இருப்போமாக.
11. ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது
பொருள்: பெரும் துன்பத்தைத் தரும் என் வயிறே! நீ ஒரு
நாளைக்கு உணவில்லையென்றாலும் பொறுத்துக் கொள்வதில்லை.
கிடைக்கும் போது இரண்டு நாட்களுக்கு எடுத்துக் கொள்
என்றாலும் கேட்பதில்லை, என் கஷ்டத்தை அறியாத உன்னோடு
வாழ்வது பெரும் கடினம்.
12. ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு
பொருள்: அரசனும், ஆற்றங்கரையிலிருக்கும் மரங்களும் அறிய
வாழ்ந்த உயர் வாழ்வும் வீழ்ந்து விடும். ஆனால் உழவு செய்து
வாழ்வதற்கு என்றுமே வீழ்ச்சியில்லை. வேறெந்த வேலைக்கும்
வீழ்ச்சி என்பது உண்டு.
13. ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர் - ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்அம் புவியதன் மேல்
பொருள்: இந்த புவியில் மெய்யாக வாழ இருப்பவரை யாரும்
அழிக்கவும் முடியாது, அழிய இருப்பவரைக் காக்கவும் முடியாது,
ஓயாது பிச்சையெடுத்துக் கொண்டிருப்பவரை விலக்கவும் முடியாது.
14. பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்
பொருள்: பிச்சை எடுப்பதை விட மேலானது, பிறரை அண்டி
அவருக்கு இதமாகப் பேசி மானத்தை விட்டு வயிறு வளர்ப்பது.
சீச்சீ, இதற்கு மானத்தைக் காத்துக் கொண்டு இறந்து போவதே
மேல்.
15. சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்
இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்
பொருள்: சிவனை நினைத்திருப்பவர்களுக்கு ஒரு நாளும் துன்பம்
என்பது இல்லை. அதுவே அறிவிற்சிறந்த வழியாகும்,
மற்றவையெல்லாம் விதிப்படியே நடந்து விடும்.
16. தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி
பொருள்: இந்த உலகத்தில் நீரின் குணம் நிலத்தின் தன்மையை
சார்ந்தும், உயர்ந்தோர் குணம் அவர்கள் கொடையைச் சார்ந்தும்,
கண்களின் குணம் மாறாத கருணையாலும், பெண்களின் குணம்
அவர்கள் கற்பைச் சார்ந்தும் இருப்பதை பெரும் விஷயங்கள் என்று
அறிந்து கொள்.
17. செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்?- வையத்து
"அறும்-பாவம்!" என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்?
பொருள்: நாம் செய்த தீவினைகள் பல இருக்கும் போது
தெய்வத்தை நிந்திப்பதால் பெரும் பொருள் நம்மைத் தேடி வந்து
விடுமா? வசதி இருக்கும் போது பாவம் தீரும் என்று கருதியாவது
பிறர்க்கு உதவி செய்யாதவர்க்கு, வெறும் பானை பொங்குவது
போலவே அவர் தேடும் செல்வமும்.
18. பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்
பொருள்: இந்த உலகத்தில் கருமிகளாக இருப்பவர்கள், பெற்றோர்,
உடன்பிறந்தோர், நமது நாட்டவர், உறவினர்கள், நண்பர்கள் என
எவர் வந்து கெஞ்சினாலும் உதவ மாட்டார்கள். வேறு யாராவது
வந்து துன்புறுத்தினால்தான் கொடுப்பார்கள்.
19. சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்
பொருள்: இந்தப் பாழும் உடலையும், வயிற்றின் பசிக்
கொடுமையையும் த்ருப்தி செய்ய, ஒரு படி அரிசிக்காக நாம்
ஒருவனுக்கு சேவகம் செய்கிறோம், போய் பிச்சை கேட்கிறோம்,
கடல் கடந்து போகிறோம், தகுதியில்லாதவனை எல்லாம் பெரிதாக
பாவிக்கிறோம், போற்றிப் பாடி, அவன் கூறுவதற்கெல்லாம்
இசைகிறோம்.
20. அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் - இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும்
பொருள்: விலை மாதர்களுடனான கொண்டாட்டம் இம்மை, மறுமை
இரண்டுக்குமே நல்லதன்று. அம்மிக் கல்லைத் தெப்பமாக நம்பி
ஆற்றில் இறங்குவது போல, அது பெரும் செல்வத்தையும் அழித்து
நம்மை வெறுமைக்கு இட்டுச் சென்று விடும்.
21. நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான்
பொருள்: சிவந்த தாமரை மலரில் வீற்றிருக்கும் லக்ஷ்மி தேவி
வஞ்சமில்லாதவர்க்கு நீர், தங்குமில்லம், நிலம் நிறைந்த உணவு,
சிறந்த பேர், புகழ், பெருமையான வாழ்வு, ஊருக்கே தேவையான
செல்வம், நீண்ட வாழ்நாள் இவை அனைத்தையும் தருகிறாள்.
22. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்
பொருள்: பாடுபட்டுத் தேடிய பொருளை பிறர்க்குக் கொடுத்து
உதவாது புதையல் போல வைத்துப் பாதுகாக்கும் அறிவு கெட்ட
மனிதர்களே! பாவிகளே! நீங்கள் இங்கிருந்து இறந்து போகும்
போது அந்தப் பணத்தை யார் அனுபவிக்கப் போகிறார்கள்?
23. வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை
பொருள்: நீதிமன்றத்திலே ஒரு கட்சியின் சார்பாகப் பேசுபவர்
வீட்டில் பேய் புகுந்து விடும், பாழடைந்து வெள்ளெருக்கம்பூ பூத்து
விடும், பாதாளத்தில் பாயும் கொடிகள் படர்ந்து விடும், மூதேவி
சென்று வாழ்வாள், பாம்பு புகும்.
24. நீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் (;) பாழே
மடக்கொடி இல்லா மனை
பொருள்: திருநீரணியாத நெற்றியும், நெய்யில்லாத உணவும்,
ஆறில்லாத ஊரும், மாறுபாடில்லாத உடன்பிறப்பில்லாத உடலும்,
நல்ல மனைவியில்லாத வீடும் பாழே.
25. ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு
பொருள்: வரவுக்கு அதிகமாக செலவாகி விட்டால் மானம் அழியும்,
அறிவும் அழியும், போன திசையிலெல்லாம் திருடனைப் போலப்
பார்ப்பார்கள், ஏழு பிறவியிலும் தீயவனாகி விடுவோம்,
நல்லவர்களுக்கும் விரும்பாதவர்களாகி விடுவோம்.
26. மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்
பொருள்: நம் மானம், குலப்பெருமை, கல்வி, திறமை, அறிவு,
கொடை குணம், தவம், உயர்வு, நிர்வாக குணம், தேன் போலப்
பேசும் பெண்களின் மேல் கொண்ட காதல் இந்த பத்தும் பசி வந்து
விட்டால் பறந்து போய் விடும்.
27. ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்
பொருள்: நாம் நினைக்கும் ஒன்று கிடைக்காமலே போகும், அல்லது
கிடைத்தாலும் கிடைத்து விடும், மற்றொன்று நினைக்கும் முன்பே
நமக்கு வந்து சேர்ந்தும் விடும், இவையெல்லாம் அந்த சிவன்
செயலே.
28. உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்
பொருள்: சாப்பிடுவது ஒரு படி அரிசி, உடுப்பது நான்கு முழத்
துணி, ஆனால் நம் எண்ணங்களோ எண்பது கோடி,
கண்மூடித்தனமான இந்த மனித வாழ்க்கை மண்பானையைப் போல
சாகும் வரை துன்பம் தான்.
29. மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
கன்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்
பொருள்: மரம் பழுத்து விட்டது, வா! என்று யாரும் இங்கு
வௌவாலை அழைப்பவரில்லை, பசுவானது, சுரக்கும் அமுதமான
பாலைக் கன்றுக்கு தருவது போல ஓயாது கொடுத்துக் கொண்டே
இருந்தால், இந்த உலகத்தவர் எல்லாம் நம்மிடம் உற்றாராகவே
இருப்பர்.
30. தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரை யோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி
பொருள்: வேந்தே! அவரவர் முற்பிறப்பில் செய்த
வினைப்பயன்களை ப்ரம்மன் எழுத்துப்படியே அவரவர்
அனுபவிப்பர், தீயவர்களையெல்லாம் என்ன செய்ய முடியும்?
எல்லாரும் சேர்ந்து வெறுத்தாலும் விதி போய் விடுமா என்ன?
31. இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று(;) சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய்(;) பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி
பொருள்: குற்றமுள்ள பாட்டை விட வெறும் இசையே சிறந்தது.
உயர்ந்த குலம் என்று சொல்லிக் கொள்வதை விட சிறந்த ஒழுக்கமே
மேலானது. முறை தவறின வீரத்தை விட விடாத நோயே சிறந்தது.
பழிக்கு அஞ்சாத மனைவியை விட தனித்து வாழ்தலே சிறந்தது.
32. ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து
பொருள்: மக்களே! செல்வமானது ஆற்றில் தோன்றும் மேடு,
பள்ளங்களைப் போன்று நிலையில்லாதது. எனவே பிறர்க்கு
சோறும், நீரும் கொடுத்து தர்மம் செய்யுங்கள், அது உள்ளத்தில்
ஒழுக்கத்தை உயர்த்தி வளர்க்கும்.
33. வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்(;) வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்
பொருள்: யானையைக் குத்திப் பாயும் வேல் கொம்பு பஞ்சில்
பாயாது. நீண்ட இரும்பு கடப்பாறையால் பிளவு படாத கற்பாறை
பசு மரத்தின் வேரினால் பிளவு பட்டு விடும். எனவே கடும்
சொற்கள் இனிமையான சொல்லை வென்று விடாது.
34. கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்(;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்
பொருள்: படிக்காதவன் ஆயினும் ஒருவனிடம் பொருள் வந்து
விடுமானால் எல்லாரும் அவனை சென்று போற்றி அழைப்பர்.
பொருளில்லாதவனை மனையாளும் விரும்ப மாட்டாள், மேலும்
ஈன்றெடுத்த தாயும் விரும்ப மாட்டாள், அவன் சொல்லுக்கும்
எங்கும் மதிப்பு இருக்காது.
35. பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு
பொருள்: பூக்காமலே காய்க்கும் மரமும் உண்டு, மக்களுள்
மற்றொருவர் கூறாமல் தானே உணர்ந்து செயல் செய்வோரும்
உண்டு, வேண்டி விதைத்தாலும் முளைக்காத விதையைப் போல
அறிவில்லாதவர்க்கு அடுத்தவர் சொன்னாலும் எந்த உணர்வும்
வராது.
36. நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ
போதம் தனம்கல்வி பொன்றவரும் காலமயல்
மாதர்மேல் வைப்பார் மனம்
பொருள்: ஒளி பொருந்திய வளையல்களை அணிந்தவளே!
நண்டும், சிப்பியும், மூங்கிலும், வாழையும் தான் அழியும் காலம்
வந்தால் தான் கருவைப் பிறப்பிக்கின்றன. அதுபோல அறிவு,
செல்வம், கற்ற கல்வி இவைகள் அழியும் காலம் வந்தாலே ஒருவர்
அயல் மாதர் மேல் பற்று கொள்கின்றனர்.
37. வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே
விண்ணுறுவார்க் கில்லை விதி
பொருள்: நெஞ்சே! கவலைப் படாதே, விதியை வெல்வதற்கு வேதம்
முதலான அனைத்து நூல்களிலும் ஒரு வழியும் இல்லை. நாம்
நினைப்பதெல்லாம் நடப்பதுமில்லை, ஆனால் முக்தியை அடையும்
வழியில் இருப்பவர்க்கு விதி என்று ஒன்று இல்லை.
38. நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்.
பொருள்: நல்லதென்றும், தீயதென்றும், தானென்றும், தனதென்றும்,
வேண்டியதென்றும், வேண்டாததென்றும் இரண்டற்று நிற்கும்
நிலையே தத்துவமாம். இதை விட மெய்ப் பொருள் என்ற ஒன்றை
வேறெங்கோ தேடுவது, சம்பா நெல்லை அறுத்தவர் அதைக்
கட்டுவதற்கு (அதிலேயே கயிறு திரித்துக் கொள்ளலாம்)
வேறெங்கோ கயிறைத் தேடுவது போன்றது.
39. முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு
பொருள்: முப்பது வயதாகும் அளவில் மண், பெண், பொன்
ஆசைகளை விடுத்து ஒருவன், மேலான இறையைத் தவறாமல்
தேடிப் பெறவில்லை என்றால் அவன் வளர்ச்சி பெண்களின்
முலையளவே ஆகும், கற்ற கல்வியும் கிளி கூறுவதையே கூறிக்
கொண்டிருத்தல் போலாகும்.
40. தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.
பொருள்: தேவர் திருக்குறளும், நான்கு வேதங்களின் முடிவான
உபநிஷத்துக்களும், மூவர் மொழிந்த(அப்பர் சுந்தரர் சம்பந்தர்)
திருமறையும், மாணிக்க வாசகர் மொழிந்த திருக்கோவையும்,
திருவாசகமும், திருமூலர் திருமந்திரமும் கூறுவது ஒரே
விஷயத்தைத்தான்.
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா.
பொருள்: பால், தெளிந்த தேன், வெல்லப்பாகு, பருப்பு இவை
நான்கையும் கலந்து (பாயஸம்!) நான் உனக்கு தருவேன்,
உயிர்களுக்கு நல்லது செய்யும், உயர்ந்த யானை முகம் கொண்ட
விநாயகப் பெருமானே, நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றையும் தா.
1. புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்-எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லுந்
தீதொழிய நன்மை செயல்.
பொருள்: நாம் செய்யும் புண்ய கார்யங்கள் நமக்கு உயர்வைத்
தரும். பாவ கார்யங்கள் நமக்கு அழிவைத் தரும். நம் முன்
பிறப்பில் நாம் செய்த அவைகளே நமக்கு சொத்து. யோசித்துப்
பார்த்தால் எந்த சமயமும் இதைத் தவிர வேறெதையும்
சொல்லவில்லை. எனவே தீதை ஒழித்து நன்மையே செய்யுங்கள்.
2. சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.
பொருள்: நீதி நூல்களில் உள்ள முறை தவறாது பிறர்க்கு உதவுபவர்
பெரியோர், உதவாதவர் இழிந்தோர். சொல்லப்போனால் உலகில்
இது இரண்டே சாதிகளாகும்.
3. இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே
இடும்பொய்யை மெய்யென் றிராதே - இடுங்கடுக
உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.
பொருள்: துன்பங்களை இடும் பை இது, இதையே இயல்பாக
உடைய உணவை இடும் இந்த பொய்யுடலை மெய்யென்று
நினைத்துக் கொண்டு இருக்காதே. விரைந்து பிறர்க்கு
உதவுவதையே செய்து வந்து, சம்சாரம் எனும் இந்த பெரும் நோயை
வென்றவரை மோக்ஷமாகிய வீடு அழைத்துக் கொண்டாடும்.
4. எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய் யொண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லாற் - கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக்குமே
ஆங்கால மாகு மவர்க்கு.
பொருள்: நாம் செய்த புண்யத்தின் காலம் வராத போது நாம்
திட்டமிட்டுச் செய்தாலும் ஒரு கார்யத்தின் பலன் கிடைக்காது.
காலம் வந்தாலே பலன் கிடைக்கும். காலம் கருதாது செய்த
முயற்சி, மாங்காய்க்கு ஆசைப்பட்டு ஒரு குருடன் எறிந்த அவன்
ஊன்று கோல் போல் ஆகிவிடும். (நடக்க இருந்த கோலும் போய்,
மாங்காயும் கிடைக்காதது போல்)
5. வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றாற் போகா - இருந்தேங்கி
நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரந் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.
பொருள்: நமக்கு என்று விதிக்கப்படாத ஒன்று நாம் எவ்வளவு
வருந்தி முயற்சித்தாலும் நமக்குக் கிடைக்காது. நமக்கு என்று
விதிக்கப்பட்ட ஒன்று நாம் எவ்வளவு சொன்னாலும் நம்மை விட்டுப்
போகப்போவதுமில்லை. ஆனால் இவைகளையே வெகுகாலம்
ஏங்கி நினைத்து நெஞ்சம் புண்ணாகி பின் இறந்து போவதே மனிதர்
தொழிலாகி விட்டது.
6. உள்ள தொழிய ஒருவர்க் கொருவர்சுகங்
கொள்ளக் கிடையா குவலயத்தில் - வெள்ளக்
கடலோடி மீண்டு கரையேறி னாலென்
உடலோடு வாழும் உயிர்க்கு
பொருள்: திரைகடல் தாண்டிப் போய் வந்து வேலை செய்து
பொருள் சேர்த்தாலும் ஒருவர்க்கு எவ்வளவு கிடைக்க வேண்டும்
என்று விதி இருக்கிறதோ அவ்வளவே கிடைக்குமே ஒழிய,
இன்னொருவர் சுகமும் சேர்த்து அவருக்குக் கிடைக்கப்
போவதில்லை.
7. எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை - நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போற்
பிரிந்திருப்பார் பேசார் பிறர்க்கு
பொருள்: எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் இந்த உடல் புழுக்களும்,
நோய்களும் மலியும் இடமே. இதை அறிந்த நல்லவர்கள் தாமரை
இலை நீர்ப் போல இதனிடம் பற்று வைக்காமலே இருப்பர்.
பிறரிடமும் இதைக் குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருக்க
மாட்டார்கள்.
8. ஈட்டும் பொருண்முயற்சி எண்ணிறந்த வாயினும் ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணு மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணுந் தனம்
பொருள்: அகிலத்தில் வாழும் மனிதர்களே! எண்ணிறந்த வழிகள்
பொருள் தேடுவதற்கு இருந்தாலும், விதி நமக்கென்று
விதித்திருந்தாலன்றி எதுவும் நமக்குக் கிடைக்கப் போவதில்லை.
கிடைத்தாலும் நிலைப்பதில்லை, எனவே நல்ல மரியாதையை
மட்டுமே விரும்பித் தேடிக் கொள்ளுங்கள்.
9. ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து
பொருள்: பெருக்கெடுத்து ஓடிய நீர் வற்றி, கால் சுடும் அளவிற்கு
காய்ந்திருந்தாலும் ஆறானது தனது ஊற்று நீரால் உலகை ஊட்டி
வாழ்விக்கும். அதுபோலவே வறுமை அடைந்த போதும் நல்ல
குடியில் பிறந்தவர்கள் தகுந்தவர்களுக்கு இல்லை என்று சொல்ல
மாட்டார்கள்.
10. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்னென் றிட்டுண் டிரும்.
பொருள்: மக்களே! ஆண்டுகள் தோறும் அழுது புரண்டாலும்
இறந்தவர் மீண்டும் வரப்போவதில்லை. நாமும் அவ்வழியிலேயே
போகப்போகிறோம். எனவே நாம் இருக்கும் வரை எந்தக்
கவலையும் கொள்ளாமல் பிறர்க்கும் கொடுத்து நாமும் உண்டு
இருப்போமாக.
11. ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது
பொருள்: பெரும் துன்பத்தைத் தரும் என் வயிறே! நீ ஒரு
நாளைக்கு உணவில்லையென்றாலும் பொறுத்துக் கொள்வதில்லை.
கிடைக்கும் போது இரண்டு நாட்களுக்கு எடுத்துக் கொள்
என்றாலும் கேட்பதில்லை, என் கஷ்டத்தை அறியாத உன்னோடு
வாழ்வது பெரும் கடினம்.
12. ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு
பொருள்: அரசனும், ஆற்றங்கரையிலிருக்கும் மரங்களும் அறிய
வாழ்ந்த உயர் வாழ்வும் வீழ்ந்து விடும். ஆனால் உழவு செய்து
வாழ்வதற்கு என்றுமே வீழ்ச்சியில்லை. வேறெந்த வேலைக்கும்
வீழ்ச்சி என்பது உண்டு.
13. ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர் - ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்அம் புவியதன் மேல்
பொருள்: இந்த புவியில் மெய்யாக வாழ இருப்பவரை யாரும்
அழிக்கவும் முடியாது, அழிய இருப்பவரைக் காக்கவும் முடியாது,
ஓயாது பிச்சையெடுத்துக் கொண்டிருப்பவரை விலக்கவும் முடியாது.
14. பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்
பொருள்: பிச்சை எடுப்பதை விட மேலானது, பிறரை அண்டி
அவருக்கு இதமாகப் பேசி மானத்தை விட்டு வயிறு வளர்ப்பது.
சீச்சீ, இதற்கு மானத்தைக் காத்துக் கொண்டு இறந்து போவதே
மேல்.
15. சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்
இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்
பொருள்: சிவனை நினைத்திருப்பவர்களுக்கு ஒரு நாளும் துன்பம்
என்பது இல்லை. அதுவே அறிவிற்சிறந்த வழியாகும்,
மற்றவையெல்லாம் விதிப்படியே நடந்து விடும்.
16. தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி
பொருள்: இந்த உலகத்தில் நீரின் குணம் நிலத்தின் தன்மையை
சார்ந்தும், உயர்ந்தோர் குணம் அவர்கள் கொடையைச் சார்ந்தும்,
கண்களின் குணம் மாறாத கருணையாலும், பெண்களின் குணம்
அவர்கள் கற்பைச் சார்ந்தும் இருப்பதை பெரும் விஷயங்கள் என்று
அறிந்து கொள்.
17. செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்?- வையத்து
"அறும்-பாவம்!" என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்?
பொருள்: நாம் செய்த தீவினைகள் பல இருக்கும் போது
தெய்வத்தை நிந்திப்பதால் பெரும் பொருள் நம்மைத் தேடி வந்து
விடுமா? வசதி இருக்கும் போது பாவம் தீரும் என்று கருதியாவது
பிறர்க்கு உதவி செய்யாதவர்க்கு, வெறும் பானை பொங்குவது
போலவே அவர் தேடும் செல்வமும்.
18. பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்
பொருள்: இந்த உலகத்தில் கருமிகளாக இருப்பவர்கள், பெற்றோர்,
உடன்பிறந்தோர், நமது நாட்டவர், உறவினர்கள், நண்பர்கள் என
எவர் வந்து கெஞ்சினாலும் உதவ மாட்டார்கள். வேறு யாராவது
வந்து துன்புறுத்தினால்தான் கொடுப்பார்கள்.
19. சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்
பொருள்: இந்தப் பாழும் உடலையும், வயிற்றின் பசிக்
கொடுமையையும் த்ருப்தி செய்ய, ஒரு படி அரிசிக்காக நாம்
ஒருவனுக்கு சேவகம் செய்கிறோம், போய் பிச்சை கேட்கிறோம்,
கடல் கடந்து போகிறோம், தகுதியில்லாதவனை எல்லாம் பெரிதாக
பாவிக்கிறோம், போற்றிப் பாடி, அவன் கூறுவதற்கெல்லாம்
இசைகிறோம்.
20. அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் - இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும்
பொருள்: விலை மாதர்களுடனான கொண்டாட்டம் இம்மை, மறுமை
இரண்டுக்குமே நல்லதன்று. அம்மிக் கல்லைத் தெப்பமாக நம்பி
ஆற்றில் இறங்குவது போல, அது பெரும் செல்வத்தையும் அழித்து
நம்மை வெறுமைக்கு இட்டுச் சென்று விடும்.
21. நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான்
பொருள்: சிவந்த தாமரை மலரில் வீற்றிருக்கும் லக்ஷ்மி தேவி
வஞ்சமில்லாதவர்க்கு நீர், தங்குமில்லம், நிலம் நிறைந்த உணவு,
சிறந்த பேர், புகழ், பெருமையான வாழ்வு, ஊருக்கே தேவையான
செல்வம், நீண்ட வாழ்நாள் இவை அனைத்தையும் தருகிறாள்.
22. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்
பொருள்: பாடுபட்டுத் தேடிய பொருளை பிறர்க்குக் கொடுத்து
உதவாது புதையல் போல வைத்துப் பாதுகாக்கும் அறிவு கெட்ட
மனிதர்களே! பாவிகளே! நீங்கள் இங்கிருந்து இறந்து போகும்
போது அந்தப் பணத்தை யார் அனுபவிக்கப் போகிறார்கள்?
23. வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை
பொருள்: நீதிமன்றத்திலே ஒரு கட்சியின் சார்பாகப் பேசுபவர்
வீட்டில் பேய் புகுந்து விடும், பாழடைந்து வெள்ளெருக்கம்பூ பூத்து
விடும், பாதாளத்தில் பாயும் கொடிகள் படர்ந்து விடும், மூதேவி
சென்று வாழ்வாள், பாம்பு புகும்.
24. நீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் (;) பாழே
மடக்கொடி இல்லா மனை
பொருள்: திருநீரணியாத நெற்றியும், நெய்யில்லாத உணவும்,
ஆறில்லாத ஊரும், மாறுபாடில்லாத உடன்பிறப்பில்லாத உடலும்,
நல்ல மனைவியில்லாத வீடும் பாழே.
25. ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு
பொருள்: வரவுக்கு அதிகமாக செலவாகி விட்டால் மானம் அழியும்,
அறிவும் அழியும், போன திசையிலெல்லாம் திருடனைப் போலப்
பார்ப்பார்கள், ஏழு பிறவியிலும் தீயவனாகி விடுவோம்,
நல்லவர்களுக்கும் விரும்பாதவர்களாகி விடுவோம்.
26. மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்
பொருள்: நம் மானம், குலப்பெருமை, கல்வி, திறமை, அறிவு,
கொடை குணம், தவம், உயர்வு, நிர்வாக குணம், தேன் போலப்
பேசும் பெண்களின் மேல் கொண்ட காதல் இந்த பத்தும் பசி வந்து
விட்டால் பறந்து போய் விடும்.
27. ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்
பொருள்: நாம் நினைக்கும் ஒன்று கிடைக்காமலே போகும், அல்லது
கிடைத்தாலும் கிடைத்து விடும், மற்றொன்று நினைக்கும் முன்பே
நமக்கு வந்து சேர்ந்தும் விடும், இவையெல்லாம் அந்த சிவன்
செயலே.
28. உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்
பொருள்: சாப்பிடுவது ஒரு படி அரிசி, உடுப்பது நான்கு முழத்
துணி, ஆனால் நம் எண்ணங்களோ எண்பது கோடி,
கண்மூடித்தனமான இந்த மனித வாழ்க்கை மண்பானையைப் போல
சாகும் வரை துன்பம் தான்.
29. மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
கன்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்
பொருள்: மரம் பழுத்து விட்டது, வா! என்று யாரும் இங்கு
வௌவாலை அழைப்பவரில்லை, பசுவானது, சுரக்கும் அமுதமான
பாலைக் கன்றுக்கு தருவது போல ஓயாது கொடுத்துக் கொண்டே
இருந்தால், இந்த உலகத்தவர் எல்லாம் நம்மிடம் உற்றாராகவே
இருப்பர்.
30. தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரை யோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி
பொருள்: வேந்தே! அவரவர் முற்பிறப்பில் செய்த
வினைப்பயன்களை ப்ரம்மன் எழுத்துப்படியே அவரவர்
அனுபவிப்பர், தீயவர்களையெல்லாம் என்ன செய்ய முடியும்?
எல்லாரும் சேர்ந்து வெறுத்தாலும் விதி போய் விடுமா என்ன?
31. இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று(;) சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய்(;) பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி
பொருள்: குற்றமுள்ள பாட்டை விட வெறும் இசையே சிறந்தது.
உயர்ந்த குலம் என்று சொல்லிக் கொள்வதை விட சிறந்த ஒழுக்கமே
மேலானது. முறை தவறின வீரத்தை விட விடாத நோயே சிறந்தது.
பழிக்கு அஞ்சாத மனைவியை விட தனித்து வாழ்தலே சிறந்தது.
32. ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து
பொருள்: மக்களே! செல்வமானது ஆற்றில் தோன்றும் மேடு,
பள்ளங்களைப் போன்று நிலையில்லாதது. எனவே பிறர்க்கு
சோறும், நீரும் கொடுத்து தர்மம் செய்யுங்கள், அது உள்ளத்தில்
ஒழுக்கத்தை உயர்த்தி வளர்க்கும்.
33. வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்(;) வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்
பொருள்: யானையைக் குத்திப் பாயும் வேல் கொம்பு பஞ்சில்
பாயாது. நீண்ட இரும்பு கடப்பாறையால் பிளவு படாத கற்பாறை
பசு மரத்தின் வேரினால் பிளவு பட்டு விடும். எனவே கடும்
சொற்கள் இனிமையான சொல்லை வென்று விடாது.
34. கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்(;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்
பொருள்: படிக்காதவன் ஆயினும் ஒருவனிடம் பொருள் வந்து
விடுமானால் எல்லாரும் அவனை சென்று போற்றி அழைப்பர்.
பொருளில்லாதவனை மனையாளும் விரும்ப மாட்டாள், மேலும்
ஈன்றெடுத்த தாயும் விரும்ப மாட்டாள், அவன் சொல்லுக்கும்
எங்கும் மதிப்பு இருக்காது.
35. பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு
பொருள்: பூக்காமலே காய்க்கும் மரமும் உண்டு, மக்களுள்
மற்றொருவர் கூறாமல் தானே உணர்ந்து செயல் செய்வோரும்
உண்டு, வேண்டி விதைத்தாலும் முளைக்காத விதையைப் போல
அறிவில்லாதவர்க்கு அடுத்தவர் சொன்னாலும் எந்த உணர்வும்
வராது.
36. நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ
போதம் தனம்கல்வி பொன்றவரும் காலமயல்
மாதர்மேல் வைப்பார் மனம்
பொருள்: ஒளி பொருந்திய வளையல்களை அணிந்தவளே!
நண்டும், சிப்பியும், மூங்கிலும், வாழையும் தான் அழியும் காலம்
வந்தால் தான் கருவைப் பிறப்பிக்கின்றன. அதுபோல அறிவு,
செல்வம், கற்ற கல்வி இவைகள் அழியும் காலம் வந்தாலே ஒருவர்
அயல் மாதர் மேல் பற்று கொள்கின்றனர்.
37. வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே
விண்ணுறுவார்க் கில்லை விதி
பொருள்: நெஞ்சே! கவலைப் படாதே, விதியை வெல்வதற்கு வேதம்
முதலான அனைத்து நூல்களிலும் ஒரு வழியும் இல்லை. நாம்
நினைப்பதெல்லாம் நடப்பதுமில்லை, ஆனால் முக்தியை அடையும்
வழியில் இருப்பவர்க்கு விதி என்று ஒன்று இல்லை.
38. நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்.
பொருள்: நல்லதென்றும், தீயதென்றும், தானென்றும், தனதென்றும்,
வேண்டியதென்றும், வேண்டாததென்றும் இரண்டற்று நிற்கும்
நிலையே தத்துவமாம். இதை விட மெய்ப் பொருள் என்ற ஒன்றை
வேறெங்கோ தேடுவது, சம்பா நெல்லை அறுத்தவர் அதைக்
கட்டுவதற்கு (அதிலேயே கயிறு திரித்துக் கொள்ளலாம்)
வேறெங்கோ கயிறைத் தேடுவது போன்றது.
39. முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு
பொருள்: முப்பது வயதாகும் அளவில் மண், பெண், பொன்
ஆசைகளை விடுத்து ஒருவன், மேலான இறையைத் தவறாமல்
தேடிப் பெறவில்லை என்றால் அவன் வளர்ச்சி பெண்களின்
முலையளவே ஆகும், கற்ற கல்வியும் கிளி கூறுவதையே கூறிக்
கொண்டிருத்தல் போலாகும்.
40. தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.
பொருள்: தேவர் திருக்குறளும், நான்கு வேதங்களின் முடிவான
உபநிஷத்துக்களும், மூவர் மொழிந்த(அப்பர் சுந்தரர் சம்பந்தர்)
திருமறையும், மாணிக்க வாசகர் மொழிந்த திருக்கோவையும்,
திருவாசகமும், திருமூலர் திருமந்திரமும் கூறுவது ஒரே
விஷயத்தைத்தான்.